Wednesday 13 May 2015

50 ஆயிரம் 'போலி' ஆசிரியர்கள். தமிழகம் முதலிடம்



நாம் தலையில் அடித்துக்கொள்ள மற்றொரு செய்தி. வேறேன்ன செய்ய முடியும்?

யாருக்கு பதிலாகவோ போலி மாணவர்கள் தேர்வெழுதுவது உண்டு. ஆனால் இது போலி ஆசிரியர்கள் பற்றிய செய்தி.

இந்திய பொறியியல் கல்லூரிகள் தங்கள் ஆசிரியர்களை மற்ற கல்லூரிகளுடன் பகிர்ந்து கொண்டு உள்ளது இப்பொழுது நிருபணமாகியுள்ளது.

எண்ணிக்கை அளவில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் போலி ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். அதாவது இரண்டு அல்லது மூன்று கல்லூரி வருகைப்பதிவேட்டில் ஒரே ஆசிரியர் பெயர் இருக்கும். ஆனால் எங்கே வகுப்பெடுப்பார்? எதாவது ஒன்றில்தான்.

மற்ற கல்லூரிகளில் ஆசிரியர் பெயர் பட்டியலில் பெயர் உள்ளதற்காக சம்பளம் வாங்குவார் இந்த போலி ஆசிரியர்.

இவர்களிடம் பொறியியல் படித்து வருகிறவர்கள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துப்பார்த்தால் உங்களுக்கு தூக்கம் வராது.

இந்த ஆய்வை செய்தவர்கள் எங்கள் நண்பர் ? குமாரசாமி படித்த கல்லூரியில் படித்தவர் என்றால் கணக்கில் வேறு விடுதல் இருக்கும் என்று நினைக்கிற போது இன்னும் பயமாக இருக்கிறது.

இதற்கெல்லாம் என்ன தீர்வு?

'போலி ஆசிரியர்களிடமிருந்து எங்கள் மாணவர்களை காப்பாற்று' என்று பால் குடம் எடுக்க வேண்டியதுதான் அப்போதுதான் இதற்கெல்லாம் ஒரு விடுதலை கிடைக்கும்.


Saturday 9 May 2015

நாளைய தீர்ப்பு

சாதாரண மனிதர்களுக்கான நீதி, சல்மான்கான்களுக்கான நீதி என நீதி இரண்டு வகைப்படும்.


நமக்கு நீதியை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடையாது. ஆனால் எந்த வகை நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்று மட்டும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

அரசன் அன்று கொல்வான்  ஆண்டவன் நின்று கொல்வான் என தவறுகளை யாரோ தண்டிக்கட்டும் என்று நினைக்க ஆரம்பித்ததிலிருந்து தவறுகள் பெருகத்தொடங்கியிருக்க வேண்டும்.

தவறு செய்பவர்கள், நம் அளவில் சில தவறுகளை செய்ய அனுமதிக்க (டூ வீலர் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டுவது மாட்டினால் லஞ்சம் கொடுப்பது ) அல்லது பழக்கிவிட்டதால் ( ஓட்டுக்கு பணம் )  தவறுகளை தட்டிக்கேட்கும் தார்மீக பலத்தையும் இழந்து வருகிறோம்.

நாளைய தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற அளவுக்கு கூட நமக்கு மனோதைரியம் கிடையாது.

நாளைய தீர்ப்பு நம்முடைய மடமைக்கும் சேர்த்தே வழங்கப்படும் என்றே நினைக்கிறேன்.

Friday 20 March 2015

போனது மாநிலத்தின் மானம் அல்ல; கல்வியின் மானம்


பிஹார் தேர்வு முறைகேடுகள் யாருக்கும் எந்த வித அதிர்ச்சியையும் அளித்திருக்காது என்றே நினைக்கிறேன்.

'எவ்வளவோ பார்த்துட்டோம் . இதைப் பார்க்க மாட்டோமா?' என்ற மனநிலையில்தான் மக்கள் இதைப் பார்த்திருப்பார்கள்.

எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற மனநிலை எல்லோருக்கும் வந்து விட்டபிறகு, ஆசிரியர்களே லஞ்சம் கொடுத்துத்தான் அரசுப்பணிக்கு வர முடியும் என்ற நிலை இருக்கும்போது, ஒட்டுப்போட கொடுத்த பணம் பத்தாது என்று மக்கள் சண்டை போட ஆரம்பித்த பிறகு இதில் ஆச்சரியப்பட அல்லது அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது..?

தேர்வு முறைகேடுகள் எல்லா நிலைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடக வளர்ச்சியால் அவற்றை இப்போது நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவ்வளவுதான்.

பிஹார் முதல்வர் வருந்துவதுபோல, 'இது மாநிலத்திற்கு அவப்பெயர் அல்ல'. உண்மையில் கல்வி முறைக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயர்.

அடுத்த பரபரப்பு செய்தி கிடைக்கும் வரையாவது இதைப்பற்றி கொஞ்சம் யோசிப்போம்.

Thursday 5 March 2015

இந்தியாவுடைய மகளும் ; இந்தியாவுடைய மகன்களும்...


ஆண் திமிர் அடைந்திருக்கிற உச்சத்தின், குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டுகிறது, இந்தியாவின் மகள் ஆவணப்படம்.

குற்றவாளிகளில் ஒருவன் பேட்டியில் "பாடம் கற்பிக்கவே இதைச் செய்தோம்" என்கிறான். நீதியும், சிறையும் அவனுக்கு எந்தப் பாடத்தையும் கற்பிக்காததால் அப்படி பேச முடிந்திருக்கிறது. 


அவன் பேசிய ஒவ்வொரு வரிக்கும் ஒரு தூக்குத்தண்டனை தரலாம். இதயம் இல்லாத ஒருவன் எப்படி பேசுவான் என்பதற்கு ஒரு உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

குற்றவாளிகளின் வழக்காளி  ( வழக்கு அறிஞர் என்று எழுத மனம் ஒப்பவில்லை)  பேட்டியில் சொல்லியிருப்பது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.


மாலை ஆறு மணியானால் பெண்களை எல்லாம் வீட்டுக்குள் வைத்து பூட்டி விட வேண்டும் என்கிற ரேஞ்சிற்கு பேசுகிறான். வன்முறையைத்தூண்டும் விதத்தில் பேசிய குற்றத்திற்காக நீதி மன்றம் தானாக முன் வந்து இவன் மீது வழக்கு போடலாம்.



ஆவணப்படம் எடுத்தவர்கள் இவன் வீட்டு பெண்களிடமும் பேட்டி எடுத்திருக்க வேண்டும். ஒரு வேளை தன் சொந்த வீட்டுப் பெண்களின் கையாலேயே ஒருவன் செருப்படி வாங்குவதை காட்ட வேண்டாம் என்று விட்டு விட்டார்களோ என்னவோ..

காலம் நீண்டு கொண்டே செல்லுகிறபோது இந்தத்திமிரும் உயர்ந்து கொண்டே செல்லுமோ?

நாளை நம் சகோதரிகள், குழந்தைகள் நடமாடுகிற தேசமாக இது இருக்குமா? 

சினிமா, டீவி,  பத்திரிக்கைகள், விளம்பரங்கள், பொருட்களின் அட்டைகள், போஸ்டர்கள் என எதிலும் பெண்களை உடல்களாக மட்டுமே அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.


சினிமாவில் கதாநாயகர்கள் பலர் கதாநாயகிகளிடம் பொறுக்கிகளாகவே நடந்து கொள்வதால் அதைப்பார்த்து வளர்கிற இளந்தலைமுறை பொறுக்கித்தனங்களையே நாயக அம்சம் என தானும் பின்பற்றுகிறது.

இந்தச்சூழலில் இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் இருபால் மாணவர்களுக்கும் திரையிட்டு அதைப்பற்றி குழுவாக விவாதங்கள் நடத்த ஊக்குவிக்க வேண்டும். ஆண் திமிர் உருவாகும் காரணங்களை அவர்களாகவே கண்டறிய உதவ வேண்டும்.


தவறான நம்பிக்கையை ஏற்படுத்த கொழு கொழு குழந்தைகளின் படங்களை ஊட்டச்சத்து உணவு விளம்பரங்களில் பயன்படுத்தக்கூடாது என்று தடை செய்த மாதிரி பெண்களை விற்பனை பொருட்களின் விளம்பரங்களில் கவர்ச்சிக்காக பயன்படுத்தக்கூடாது என்றும் தடை கொண்டு வர வேண்டும்.

பெண்களைத் துரத்தி துரத்தி காதல் என்ற பெயரில்  டார்ச்சர் செய்ய கற்றுத்தரும் சந்தான சினிமாக்களை சென்ஸார் செய்யாமல் அனுமதிக்கும் அதிகாரிகளுக்கு இந்த ஆவணப்படத்தை போட்டு காட்ட வேண்டும்.  கும்பலின் மனோபாவத்தை உருவாக்குவதில் இதுபோன்ற படங்களின் பங்கை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.


முகேஷ் சிங் சொன்னதில் ஒரு வார்த்தை மட்டும் எனக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

"9 மணிக்கு மேல் வெளியில் சுற்றும் பெண்களுக்கு பாடம் கற்றுத்தரவே இதைச் செய்தோம்."

இன்னொரு இந்தியாவுடைய மகள் உருவாகமல் இருக்க வேண்டுமென்றால் இந்தியாவுடைய மகன்களுக்கு நாம் கற்றுத்தரவேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.

Wednesday 4 March 2015

வீடு கட்டும்போது ஏமாற்றும் இன்ஜினியர்களுக்கு எதிராக ஒரு அதிரடி நடவடிக்கை

வீடுகட்டும்  இன்ஜினியர்களில் திருடர்களை கண்டறிவது எப்படி? என்று ஒரு ஆராய்ச்சி செய்யலாம் என்றிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவர், தான் உறுப்பினராக இருக்கும்  ஒரு சங்கத்தில் செயலாளராக இருக்கிறார், நமக்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில் ஒரு பொறியாளரை வீடு கட்டத் தேர்ந்தெடுத்தார்.

நண்பரை பொறி வைத்து பிடித்ததால் பொறியாளர் என்றுதானே  சொல்ல வேண்டும். இது போன்ற அமைப்புகளில் சேர்வது வடையை வைத்துவிட்டு எலிக்காக காத்திருப்பது போன்றதுதான்.

'நமக்கு தெரிந்தவர்தானே நம்மை ஏமாற்றமாட்டார்' என்று நினைத்தால் அது மகா முட்டாள்தனம். தெரிந்தவர்களிடம்தான் தைரியமாக ஏமாற்றுவார்கள். ஏனென்றால் முகதாட்சன்யத்திற்காக நாம் பெரிதாக பிரச்சனை செய்ய மாட்டோம் அல்லவா?


பணத்திற்கு ஆசைப்பட்டு எந்தத்தவறும் செய்யக்கூடாது என்று மார்க்கெட் மதிப்பை விட கட்டுமானத்திற்கு சதுர அடிக்கு 100 ரூபாய் கூடுதலாக கொடுக்கக்கூட ஒப்புக் கொண்டிருக்கிறார்.

'கூட கொடுத்தால் தவறு செய்கிற எண்ணம் வராது' என்ற எண்ணம்தான் தவறாகிப்போனது.

'எவ்வளவு நல்லவன். இவனை விட்டா இன்னொருத்தன் எப்படி நமக்கு கிடைப்பான்? என்று முடிவு செய்துவிட்டார்' அந்தப் பொறியாளர்.

கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும்போது வருபவர்கள் எல்லாம் சொல்ல சொல்லத்தான், 'கம்பி சரியில்லை செங்கல் சரியில்லை' என்பதே நண்பருக்கு புரிந்திருக்கிறது.

வாங்கிய தொகையில் பாதிக்கு கூட வேலை நடக்க வில்லை ஆனால் பணம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் வேலை நடக்கட்டும் பணம் தருகிறோம் என்று சொன்ன பின் பொறியாளரையும் காணோம். அங்கே வேலை பார்த்தவர்களையும் காணோம்.

போனில் கூப்பிட்டால், "நீங்கள் கொடுத்த பணம் போதாது . பணம் கொடுத்தால்தான் கட்டுமானத்தை தொடர்வோம்" என்ற ஒரே பதில்தான் மறுமறுபடி.

"மொத்த தொகையில் பாதிக்கும்மேல் கொடுத்துவிட்டீர்கள். ஆனால் கால்வாசி கூட கட்டுமானம் நடக்கவில்லை" என்றிருக்கிறார் இரண்டாவது கருத்து அளித்த மற்றொரு இன்ஜினியர்

எஸ்.பி ஆபிஸில் புகார் கொடுக்க சென்றபோதுதான் தெரிந்தது . அவர் அங்கேயே பணத்தை வாங்கிக்கொண்டு இன்னும் வேலையை முடித்துக்கொடுக்காமல் இருக்கிறார் என்று.

கட்டுமானப்பொறியாளர்கள் சங்கத்திற்கு விஷயத்தை கொண்டு சென்றால் அவர் எங்கள் உறுப்பினரே இல்லை என்று கை விரித்துவிட்டார்கள்.


நண்பர் செய்த தவறுகள் என்ன?

1. தெரிந்தவர் என்பதையே நல்லவர் என்பதற்கான தகுதியாக நினைத்துக்கொண்டது.

2.      அந்தப்பொறியாளர் ஏற்கனவே கட்டிக்கொடுத்த வீடுகளுக்கு சென்று அதன் உரிமையாளர்களிடம் அவர் நடத்தையைப் பற்றி முழுமையாக விசாரிக்காதது. 

3. கட்டுமானப்பொருட்களின் தரத்தை எப்படி சோதிக்க வேண்டும் என்பதைப்பற்றிய தகவல்களை ஏற்கனவே வீடு கட்டி  நொந்தவர்களிடம் அல்லது  மற்ற பொறியாளர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளாதது..

4.           தரமற்ற பொருட்கள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தினால் என்ன செய்வோம் என்பது போன்ற எந்த ஒப்பந்தமும் வீடு கட்டுவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இல்லாதது...

இதையெல்லாம் அவரிடம் சொன்ன போது அவர் கேட்டார், "எப்படி சார் தைரியமாக தப்பு  செய்கிறார்கள்?" என்று.

ஏமாந்தவர்கள் பெரும்பாலும் ஒன்றிரண்டு பேரிடம் புலம்பிவிட்டு அவர்களின் அன்றாட வேலையை பார்க்க போய்விடுகிறார்கள்.  அதனால் ஏமாற்றுபவர்களும் அவர்களின் அன்றாட ஏமாற்று வேலைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்குத் தீர்வுதான் என்ன ?

என் நண்பர் பாதியில் நிற்கும் வீட்டின் முன் பெரிய போர்டு வைத்தார்.

'பாதியில் நிற்கும் இந்த வீட்டை இந்த நிலையில் கட்டி முடித்திருப்பவர் இன்ஜினியர் திரு............ அவர்கள்' என்று போட்டு கூடவே அவரது கட்டுமான நிறுவனத்தின் பெயரையும் சேர்த்திருந்தார்.

அடுத்தநாள் இன்ஜினியர் வந்து கட்டுமானத்தை தொடர்ந்ததுடன் விரைவாகவும் முடித்துக்கொடுத்தார்.

இந்த சம்பவம் சொல்லும் பாடம் என்ன? சொல்லுங்கள்.


Tuesday 3 March 2015

4 வயது குழந்தையை குடிக்க வைத்த கொடூரன்

ஹாய் நண்பர்களே என் சகோதரி மகன் பிராந்தி குடிப்பதை பாருங்கள்.

என்ற வரிகளோடு முகநூலில் பார்த்த அந்த வீடியோ ஒரு நிமிடம் என்னை அதிரச்செய்தது. 

டாஸ்மாக் கலாச்சாரத்தில் உச்சம்

ராம்குமார் என்றொருவன் தன் அக்காவின் நான்கு வயது குழந்தைக்கு பிராந்தி ஊற்றிக்கொடுத்து அந்தக்குழந்தையை ஊக்கப்படுத்தி குடிக்க வைத்து வீடியோ எடுத்து தன் முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கிறான்.

குடிபோதையில் தன்னிலை மறந்த நிலையில் செய்ததா? இல்லை முகநூல் போதையில் அதிகம் பேர் ஷேர் செய்யும் வீடியோவை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தன்நலத்தில் செய்ததா? தெரியவில்லை.

இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் ராம்குமாரை அசிங்கமாக திட்டி தீர்த்துவிட்டார்கள். இதற்குப்பிறகும் கூட ராம்குமார் அந்த வீடியோ பதிவை தன் பக்கத்திலிருந்து நீக்க வில்லை.

இது அவன் அக்காவுக்கு இந்நேரம் தெரிந்திருக்குமா? என்று தெரியவில்லை. சிலர் காவல்துறையில் புகார் கொடுப்போம் என்று சொன்னதைக்கூட அவன் கண்டு கொண்டதாகத் தெரிய வில்லை.

அந்தப்பத்கத்தில் இருந்த இன்னொரு புகைப்படம் அவன் மனநிலையை சொல்வதாக இருக்கிறது.

எல்லாப்போதையுமே ஆபத்தானது. அழிவைத்தரக்கூடியது.

இப்படி கிறுக்குத்தனமாக வீடியோ எடுப்பதற்கு குழந்தைகளை பலிகடா ஆக்குபவர்களுக்கு நம் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளது?

கல்லூரியில் பணியாற்றும் நண்பர் ஒருவர் தன் மூன்றாவது படிக்கும் தன் மகனுடன் சோடா கடைக்கு சென்றுள்ளார்.

ஆப்பள் சுவை சோடா வாங்கி இருவரும் குடித்திருக்கிறார்கள். முதல் மிடறு விழுங்கிவிட்டு பையன் சொன்னானாம், "அப்பா சரக்கடிச்ச மாதிரி இருக்கு"

நண்பர் அதிர்ந்து போய், "உனக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?" என்று கேட்டிருக்கிறார்.

"டீவியில, சினிமா எல்லாம் ஜீஸ் குடித்துவிட்டு இப்படித்தான் சொல்வார்கள்" என்றிருக்கிறான் அப்பாவியாக..

நண்பர்களே .. எங்கே போகிறது நம் தேசம்?  நம் இளைய தலைமுறை?


Thursday 26 February 2015

விகடனுக்கு பணக்கஷ்டமா? டைம்பாஸ் என்றொரு மோசடி ஏன்?

நான் படிக்கும் ஒரே செக்ஸ் பத்திரிக்கை டைம் பாஸ் மட்டும்தான்.

காரணம் அது ஆனந்த விகடனை நடத்தும் விகடன் குழுமத்திலிருந்து வருகிறது. 

வியாழக்கிழமை எல்லாம் எனக்கு விகடனோடுதான் விடியும். திருமணமான புதிதில் விடிந்ததும் நான் விகடனுக்காக ஒடுவதைப் பார்த்து என் மனைவி தலையில் அடித்துக்கொண்டிருக்கிறார். என் தலையிலே அடிந்திருந்தால் கூட நான் ஒடுவதை நிறுத்தியிருக்கமாட்டேன்.

ஆனந்த விகடன் மீதும் அதன்  அப்போதைய ஆசிரியர் உயர்திரு பாலசுப்ரமணியன் மீதும் எனக்கு இருந்த மரியாதையை மரியாதை என்பதற்கு விளக்கமாக வைக்கலாம்.

அப்போது ஆனந்த விகடனோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த மற்றோரு பத்திரிக்கையில் ஒரு நடிகையின் தொடையைப்போட்டு கண்டுபிடிக்க 40 பக்கம் தள்ளி வரச்சொல்வார்கள். டீன் ஏஜ்ஜில் இருந்தபோதும் கூட அதை ஒரு மலிவான வியாபார உத்தியாக நினைத்து அந்தப் பத்திரிக்கையை ஒரு நாளும் நான் காசு கொடுத்து வாங்கியதில்லை.

இதையெல்லாம் செய்யாததால் எனக்கு விகடனை பிடிக்கும்.அது ஏற்படுத்த விரும்பும் சமூக அக்கறை பிடிக்கும். அதில் உள்ள ஒவ்வொருவரின் எழுத்தும் பிடிக்கும். ஆனந்தவிகடனில் எழுதிவரும் அத்தனை விகடன் பத்திரியாளர்களையும் ரசிப்பேன்.

நான் ஆனந்த விகடனில் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.  அதன் தாக்கமாக ஒவ்வொரு முறை விகடன் வாங்கும்போதும் அதன் ஆசிரியர்குழுவைதான் முழுவதுமாக படிப்பேன்.  கிட்டத்தட்ட மனப்பாடமே ஆகிவிட்டபோதும் ஒவ்வொரு முறையும் முதலில் அந்தப்பக்கத்தை தேடி அதில் உள்ள பெயர்களை ஒன்று விடாமல் படிப்பேன்.

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன். நான் நேசிக்கும் விகடன் இப்படிச் செய்யலாமா? என்ற ஆதங்கத்தை பதிவு செய்யப்போவதால்..

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் வெளியிட்ட விமர்சனம் "ச்சீ" என்பதுதான். ( மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை ) 

எந்த பாய்ஸை குறி வைத்து அந்தப்படம் எடுக்கப்பட்டதோ அதே பாய்ஸை குறி வைத்துத்தான் டைம்பாஸீம் வெளி வருகிறது.

அந்த திரை விமர்சனம் எழுதிய எழுத்தாளர் இன்னும் விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்தால்  டைம்பாஸ் பற்றி என்ன எழுதுவார்... "ச்சீ ச்சீ"  என்றா?   


இல்லை, இப்படிச் சொல்லிவிட்டு விகடனை விட்டு விலகிப்போயிருப்பாரா? இல்லை எழுத்துக்கு ஒன்று, வயிற்றுக்கு ஒன்று என்று, இன்னும் அங்கேயே எதுவும் சொல்ல முடியாமல் புழுங்கிக்கொண்டிருப்பாரா?

டைம்பாஸில் ஜாலிகேலி எல்லாம் ஒகேதான். ஆனால் அதில் வெளியிடப்படும் கிசுகிசுக்கள்.. வெளிநாட்டு நடிகை ஒரு இரவிற்கு எவ்வளவு வாங்குகிறார் என்ற செய்திகள்.. ஆபாச படங்கள். .. 

'ஆண்திமிர் அடக்கு' என்று ஆனந்த விகடனில் அட்டைப்படக்கட்டுரை எழுதிக்கொண்டே  இந்தப்பக்கம் ஆண்திமிர் வளர்க்க டைம்பாஸ் என்றொரு பத்திரிக்கையை நடத்த எப்படி முடிகிறது?


தனக்கு ஒரு குழந்தை இருப்பதையே எந்த தகப்பனாவது மறைப்பானா? மறைக்க வேண்டியிருந்தால் அந்தக்குழந்தை எவ்வளவு மோசமான குழந்தை என்று யோசித்துபாருங்கள். 

விகடன் வெளியீடுகள் என்று விகடனே விளம்பரப்படுத்தும் எந்த விளம்பரத்திலும் டைம்பாஸ் இருக்காது . டைம்பாஸிலும் விகடன் தாத்தா படம் இருக்காது. 


அவர்களுக்கே அறுவெறுப்பாக இருக்கும் ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்ய நேரிடுவது ஏன்?

பெட்டிக்கடைக்காரர்களிடம் விசாரித்ததில் வந்தவுடன் விற்றுவிடுகிறது என்றார். ஐந்து ரூபாய் விலையும் அது தரும் ஆபாசக்குப்பையும் காரணமாக இருக்கலாம்.

முதலில் விளம்பரத்தில் ஜாலி கேலி கலாய் என்றெல்லாம்தான் சொன்னார்கள். அதனால்தான் வாங்கத் தொடங்கினேன். அரசியல்  நையாண்டிகள் எல்லாம் ஒ.கே.தான். ஆனால் டைம்பாஸில் பாதி ஆபாசக்குப்பையாகத்தான் இருக்கிறது.

ஏன் இப்படி செய்கிறார்கள்?

ஒரு வேளை இணையத்தில் கிடக்கும் இளைய தலைமுறையை பத்திரிக்கை படிக்க வைக்க வேண்டும் என்ற நல்லெண்ணமாக இருக்குமோ? யோசித்து யோசித்து களைத்து விட்டேன். 

வாசனை (நிறுவனர் எஸ்.எஸ். வாசன்) இழந்த விகடன் வாசனை இழந்த விகடன் என்றார் வாணியம்பாடி பேராசிரியர் ஒரு கூட்டத்தில். டைம் பாஸ் வராத காலகட்டத்தில் இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை . இப்போது வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏன் இப்படி செய்கிறார்கள்?

ஒரு வேளை பணக்கஷ்டமாக இருக்குமோ?

விகடன் விலையை மேலும் ஐந்து ரூபாய் ஏற்றுங்கள். நாங்கள் வாங்குகிறோம்.



தயவுசெய்து டைம்பாஸ் பத்திரிக்கையில் வரும் ஆபாச பக்கங்களை நிறுத்துங்கள். அதுதான் வாசகர்கள் மதிக்கும் விகடன் தாத்தா எம்பளத்திற்கு நீங்கள் செய்யும் மரியாதை.